கடந்த 2023, அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின் போது, மிக மோசமான மற்றும் திட்டமிட்ட பாலியல் வன்முறைகள் அரங்கேற்றப்பட்டதாக ஒரு விரிவான விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தச் சுதந்திரமான விசாரணை அறிக்கையானது, தப்பிப்பிழைத்தவர்கள், சாட்சிகள் மற்றும் முன்னாள் பிணைக் கைதிகள் என 430 பேரின் நேர்காணல்கள் மற்றும் 10,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை, சித்திரவதை மற்றும் அவமானப்படுத்துதல் ஆகியவை பாதிக்கப்பட்டவர்களின் வலியை அதிகப்படுத்துவதற்காகவே “திட்டமிட்ட உத்தியாக” பயன்படுத்தப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
தாக்குதலின் போது பெண்கள் உயிருடன் இருந்தபோதும், அவர்கள் கொல்லப்பட்ட பின்னரும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நோவா இசை விழாவில் பெண்கள் ஆடைகள் களையப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொடூரமாகக் கொல்லப்பட்டதாகத் தப்பிப்பிழைத்த ராஸ் கோஹன் மற்றும் தரின் கோமரோவ் ஆகியோர் நேரில் பார்த்த சாட்சியங்களை அளித்துள்ளனர்.
இந்த அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், குடும்ப உறவினர்களைக் கொண்டே பாலியல் செயல்களைச் செய்யக் கட்டாயப்படுத்தியது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையிலேயே பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றியது போன்ற “கினோசைடல்” (Kinocidal) வன்முறைகள் நடந்துள்ளன. இது குடும்ப அமைப்பையே சிதைக்கும் நோக்கில் செய்யப்பட்டதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
கஜாவில் உள்ள சுரங்கப்பாதைகளிலும், ரகசிய இடங்களிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிணைக் கைதிகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. முன்னாள் பிணைக் கைதி ஆகம் கோல்ட்ஸ்டைன் (17), சிறைபிடிக்கப்பட்டிருந்த போது தனது உடல் மீதான கட்டுப்பாட்டை இழந்தது எவ்வளவு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது என்பதை விவரித்துள்ளார்.
இந்தச் செயல்கள் அனைத்தும் போர்க்குற்றங்கள், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு இணையானவை என்று விசாரணை கமிஷன் தலைவர் டாக்டர் கோச்சவ் எல்காயம்-லெவி தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளாகத் திரட்டப்பட்ட இந்த ஆதாரங்கள், மனித மனசாட்சியால் ஜீரணிக்க முடியாத கொடூரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
