பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோ தலைமையிலான சுயாதீன விசாரணைக் குழு, ‘பாலியல் பாலியல் வன்கொடுமை விசாரணை அறிக்கை’ (Gang Rape Enquiry Report) ஒன்றை வெளியிட்டு ஒட்டுமொத்த பிரிட்டனையும் அதிர வைத்துள்ளது. கடந்த சில தசாப்தங்களாக பிரிட்டனில் திட்டமிட்ட முறையில் செயல்பட்டு வந்த கும்பல்களால் (Grooming Gangs), பெரும்பாலும் வெள்ளையினத்தைச் சேர்ந்த சுமார் 2,50,000 சிறுமிகள் கடுமையான பாலியல் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர் என்று அந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், நீதிமன்ற ஆவணங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, பிரிட்டன் வரலாற்றின் மிக மோசமான நிர்வாகத் தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் பின்னணியைக் கொண்ட சில குழுக்கள், ஆதரவற்ற மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த 11 வயது சிறுமிகளை இலக்கு வைத்து, அவர்களுக்கு மது, போதைப்பொருட்களைக் கொடுத்து மூளைச்சலவை செய்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

பிரிட்டனின் சுமார் 40% உள்ளாட்சிப் பகுதிகளில் இந்த கொடூர நெட்வொர்க் பரவியிருந்ததாகவும், 2005 முதல் 2017 வரையிலான குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்பட்டவர்களில் 84% பேர் தெற்காசிய, குறிப்பாகப் பாகிஸ்தானிய முஸ்லிம்கள் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த விவகாரத்தில் காவல்துறை, சமூக நலத்துறை, பள்ளிகள் மற்றும் சுகாதாரத்துறை ஆகியவை தங்களின் கடமையிலிருந்து முற்றிலும் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளிகளின் இனம் மற்றும் மதம் காரணமாகத் தங்களை ‘இனவெறியர்கள்’ (Racist) என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற அச்சத்தினாலேயே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்கியதே இந்த அவலத்திற்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. “பிரிட்டனில் இருப்பது இனவெறிப் பிரச்சினை அல்ல, குடியேற்றப் பிரச்சினைதான்” என்று ரூபர்ட் லோ விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்ற பரபரப்பும் அங்கு தொற்றிக்கொண்டுள்ளது.