பீகாரில், வாக்காளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி “யாத்திரை” ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிறு சசராமில் தொடங்கிய இந்த யாத்திரை, பாதயாத்திரை மற்றும் வாகன யாத்திரை என பல்வேறு வழிகளில் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று, நவாடா மாவட்டம் பகத்சிங் சவுக்கில் ராகுல் காந்தியின் வாகனம் சென்றபோது எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அவருக்கு பாதுகாப்பாக சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திடீரென வாகனத்தின் முன் விழுந்தார். அதே வேளையில், ராகுல் காந்தியின் வாகனம் அவரது கால் மீது ஏறிச் சென்றது. இதனால் அவர் கடுமையாக காயமடைந்து வலியால் அலறியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உடனடியாக அந்த கான்ஸ்டபிளுக்கு உதவி செய்யும்படி ராகுல் காந்தி தனது ஆதரவாளர்களிடம் கேட்டார். அவருக்கு தண்ணீர் பாட்டில் கொடுத்து, ஜீப்பில் அமரும்படி கூறிய ராகுல் காந்தி, உடல்நலத்தை கவனிக்க அறிவுறுத்தினார். எனினும், கான்ஸ்டபிள் வலியுடன் தானாக எழுந்து, கஷ்டப்பட்டு நடந்துச் சென்றார். இந்த சம்பவம் அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்ததுடன், சம்பவக் காட்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“>