ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை  நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் அவர்களுக்கு மிகப்பெரிய, மகத்தான, வரலாற்றில் பதிவாக கூடிய விதமாக ஒரு மாபெரும் வெற்றியை தேடி தந்திருக்கும் வாக்காளர் பெருமக்களுக்கு நான் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் தொடர்ந்து சொல்லி வந்தது என்னவென்றால் திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை தொடர்ந்து விடுத்து வைத்தேன்.

இந்நிலையில் திராவிட மாடல் ஆட்சியை இன்னும் சிறப்போடு நடத்திட வேண்டும் என மக்கள் இந்த மிகப்பெரிய ஆதரவை இடைத்தேர்தலில் வழங்கியிருக்கின்றார்கள். எடப்பாடி பழனிச்சாமி இந்த இடைத்தேர்தலை பொருத்தவரைக்கும் தன்னையே மறந்து ஒரு நாளாந்தர பேச்சாளரை போல் பேசிய பேச்சுக்கு இந்த இடைத்தேர்தல் மூலமாக மக்கள் ஒரு நல்ல பாடத்தை வழங்கி இருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக 20 மாத கால திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இந்த திராவிட மாடல்  ஆட்சிக்கு நீங்கள் ஒரு அங்கீகாரம் தர வேண்டும் என தொடர்ந்து பிரச்சாரத்தில் எடுத்து சொன்னேன். அதனால் மக்கள் ஒரு நல்ல எடை போட்டு இந்த ஆட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக ஒரு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்திருக்கின்றனர். இந்த வெற்றிக்காக தொடர்ந்து அயராது பாடுபட்டு பணியாற்றிய நம்முடைய அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற இன்னாள், முன்னாள் உறுப்பினர்கள், கழகத்தினுடைய செயல் வீரர்கள், மாவட்ட கழகத்தினுடைய செயலாளர்கள் அதேபோல் கூட்டணியில் இடம் பெற்று இருக்கக்கூடிய தோழமைக் கட்சியை சார்ந்து இருக்கக்கூடிய தலைவர்கள், தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்கள் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தொடக்கமாக பார்க்கலாமா அல்லது கடந்த 20 மாத ஆட்சிக்காலத்திற்கான மதிப்பெண்ணாக பார்க்கலாமா? என கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு ஏற்கனவே இந்த இடைத்தேர்தலில் பொருத்தவரை இடைத்தேர்தலாக பாருங்கள் என நான் கூறினேன். இந்த இடைத்தேர்தலில் நல்ல மதிப்பெண்களை வழங்கியிருக்கின்றனர். மேலும் இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் இதைவிட மிகப்பெரிய வெற்றியை நிச்சயமாக வழங்குவார்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து தேசிய அரசியலுக்கு நீங்கள் வரவேண்டும் என்று பரூக் அப்துல்லா போன்ற தலைவர்கள் எல்லாம் வலியுறுத்தி இருக்கின்றார்கள் இதை எப்படி பார்க்கின்றீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நான் ஏற்கனவே தேசிய  அரசியலில் தான் இருக்கிறேன். அதில் எந்த ஏமாற்றமும் கிடையாது அந்த கோரிக்கையின் அடிப்படையில் தான் நானும் நேற்று கூட்டத்திலும் பேசியிருக்கிறேன். அந்தப் பேச்சிலேயே எல்லாம் அடங்கி இருக்கிறது என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் வேட்பாளரை ஒன்றிணைக்கும் பணியில் நீங்கள் ஈடுபடுவீர்களா என கேள்வி எழுப்பி உள்ளனர்.? அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் நான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நேற்று கூட பேசினேன் யார் வெற்றி பெற்று யார் பிரதமராக வேண்டும் என்பதைவிட, யார் பிரதமராக இருக்கக் கூடாது யார் ஆட்சியில் இருக்க கூடாது, என்பதுதான் இப்போதைக்கு எங்களுடைய கொள்கை என கூறியுள்ளார்.