ஐபிஎல் (IPL) கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத ஒரு பெரும் அநியாயமும் வினோதமும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது அரங்கேறியுள்ளது. டாஸ் போடப்பட்ட போது ராஜஸ்தான் வீரர் பராக் கொடுத்த ‘கால்’ (Call) தனக்குச் சரியாகக் கேட்கவில்லை என்று மேட்ச் ரெஃப்ரி பிரகாஷ் பட் திடீரெனக் குழப்பத்தை ஏற்படுத்தினார். ஆனால், முதல் முறையே டாஸ் குஜராத் அணிக்கு சாதகமாகத்தான் விழுந்தது.

தான் ஜெயித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் குஜராத் கேப்டன் சுப்மன் கில் பேச முன்னே வந்தபோது, ரெஃப்ரி குறுக்கிட்டு டாஸை மீண்டும் போட உத்தரவிட்டார். இரண்டாவது முறை போடப்பட்ட டாஸில் ராஜஸ்தான் அணி வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டிக்குப் பின் பேசிய குஜராத் கேப்டன் சுப்மன் கில், “நான் முதல் முறையே டாஸை ஜெயித்துவிட்டேன்” என்று வெளிப்படையாகப் பேசி, தங்களுக்கு நடந்த அநியாயத்தை உடைத்துக் காட்டியுள்ளார்.

​இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவத் தொடங்கியதை அடுத்து, குஜராத் அணிக்கு நடுக்களத்திலேயே ‘பகல் கொள்ளை’ நடந்துவிட்டதாக நெட்டிசன்கள் ஐபிஎல் நிர்வாகத்தை வறுத்தெடுத்து வருகின்றனர். நியாயமாக குஜராத் ஜெயித்த டாஸை, தில்லுமுல்லு செய்து அநியாயமாகப் பறித்து ராஜஸ்தானுக்குத் தாரை வார்த்துவிட்டார்கள் என்று ரசிகர்கள் கொந்தளித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

“கண்ணெதிரே ஒரு அணியின் வெற்றியை எப்படி இப்படிப் பறிக்கலாம்? இது சுத்தமான ஏமாற்று வேலை” என்றும், ஐபிஎல்லின் நம்பகத்தன்மையைக் கேள்வி கேட்டும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.