இன்றைய காலகட்டத்தில் சந்தையில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்து நுகர்வோர் மத்தியில் தொடர் கேள்விகளும் அச்சமும் எழுந்து வருகின்றன. நாளுக்கு நாள் வெளியாகும் உணவு கலப்படச் செய்திகள் பொதுமக்களைக் கவலையடையச் செய்துள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு வீட்டிற்கும் தினசரி தேவைப்படும் பாலின் தூய்மை குறித்து மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். சந்தையில் கிடைக்கும் பாக்கெட் பாலில் ரசாயனங்கள் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தில், பெரும்பாலான மக்கள் நேரடியாகப் பால்காரர்களிடம் இருந்து பெறப்படும் மாட்டுப் பால் அல்லது எருமைப் பாலை நம்பி வாங்குகின்றனர்.

கிராமத்தில் இருந்தோ அல்லது பண்ணையில் இருந்தோ நேரடியாகக் கறந்து கொண்டு வரப்படும் பால் உடலுக்கு நல்லது என மக்கள் நம்புகின்றனர். ஆனால், இந்த ஆழமான நம்பிக்கையையே அசைத்துப் பார்க்கும் வகையிலான அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளப் பக்கமான எக்ஸ் (X) தளத்தில் @RebelliousPari8 என்ற கணக்கில் பகிரப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்ட அந்த வீடியோவில், நபர் ஒருவர் பால் பண்ணை ஒன்றில் இருந்து ஏராளமான பால் பாக்கெட்டுகளை மொத்தமாக வாங்குகிறார். பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதன் இருபுறமும் தொங்கவிடப்பட்டுள்ள பெரிய அளவிலான பால் கேன்களில், அந்தப் பாக்கெட்டுகளை ஒவ்வொன்றாக வெட்டி ஊற்றி நிரப்புகிறார்.

பின்னர், அதே பாலைத்தான் நுகர்வோரின் வீடுகளுக்குச் சென்று, பண்ணையில் இருந்து நேரடியாகக் கொண்டு வரப்பட்ட சுத்தமான ‘பசும்பால்’ எனக்கூறி அதிக விலைக்கு விற்பனை செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோவை விழிப்புணர்வுடன் பார்த்த பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள், உணவுப் பொருட்களில் நடக்கும் இத்தகைய நூதன ஏமாற்று வேலைகளுக்கு எதிராகவும், நுகர்வோர் பாதுகாப்பு குறித்தும் தங்களின் கடுமையான கண்டனங்களையும், கவலைகளையும் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.