ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலியத்திற்குச் சொந்தமான சிஎன்ஜி பம்ப் ஒன்றில், எரிபொருள் நிரப்பும் குழாய் திடீரென வெடித்துச் சிதறியதில் 24 வயது இளையவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி இரவு நடைபெற்ற இந்தச் சோகச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகித் தீயாய் பரவி வருகின்றன.

வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராதவிதமாக வாகனத்தில் இருந்து குழாய் கழன்று பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. அந்த விபத்தின் போது அதன் முனையானது  ஊழியரான துஷார் கம்ரி என்பவரின் தலையில் பலமாகத் தாக்கியதில் அவர் நிகழ்விடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். சக ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்த விபத்து குறித்துக் காவல்துறையினர் மற்றும் துறைசார் அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.  குழாய் வெடித்ததற்கான தொழில்நுட்பக் காரணங்கள் மற்றும் பம்ப் நிர்வாகத்தின் தரப்பில் ஏதேனும் பாதுகாப்புக் குறைபாடுகள் அல்லது கவனக்குறைவு இருந்ததா என்பது குறித்துப் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இதற்கிடையில், குடும்பத்தின் ஒரே ஆதரவாக இருந்த இறந்த இளைஞருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும் பொதுமக்களும் தீவிர கோரிக்கை விடுத்து வருகின்றனர்.