இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில், இந்தியா ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகள் மோதும் வாழ்வா-சாவா போட்டி நடைபெற்றது. கடந்த போட்டியில் இலங்கை வீரர்களுடன் மைதானத்தில் மோதலில் ஈடுபட்ட இந்திய இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூரியவன்ஷி, இப்போட்டியில் தனது பேட்டிங் மூலம் பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில், சம்ஸ் உர் ரஹ்மான் வீசிய பந்தை வைபவ் கட் செய்ய முயன்றார்.

அப்போது பந்து எதிர்பாராத விதமாக எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆகி பாயிண்ட் திசையில் காற்றில் பறந்தது. அங்கு நின்றிருந்த ஆப்கான் வீரர் ஃபரிதூன், இடதுபுறமாக காற்றில் பறந்து ஒற்றைக் கையில் ஒரு அசாத்தியமான கேட்ச்சை பிடித்தார். இதைப் பார்த்தவுடன் வைபவ் சூரியவன்ஷி அவுட் ஆகிவிட்டார் என்று நினைத்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஒட்டுமொத்தமாக மைதானத்தில் குதித்து உலகக்கோப்பையை வென்றது போல் கொண்டாடத் தொடங்கினர்.

 

ஆனால், கள நடுவருக்கு அந்த கேட்ச்சில் சற்று சந்தேகம் இருந்ததால், இறுதி முடிவை மூன்றாவது நடுவரிடம் ஒப்படைத்தார். அப்போது வைபவ் சூரியவன்ஷி ரன் ஏதும் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் களத்தில் இருந்தார். தொலைக்காட்சி மறுஒளிபரப்பில்  பல கோணங்களில் ஆராய்ந்த போது, ஃபரிதூன் காற்றில் பறந்து கேட்ச் பிடித்து தரையில் விழும்போது, பந்தின் ஒரு பகுதி மைதானத்தின் புல் தரையில் பட்டது துல்லியமாகத் தெரிந்தது.

இதனால் மூன்றாவது நடுவர் ஆப்கானிஸ்தானின் கொண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, வைபவ் சூரியவன்ஷியை ‘நாட் அவுட்’ என அறிவித்தார். இதனால் மைதானத்தில் இருந்த ஆப்கான் வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த அதிர்ஷ்டத்திற்குப் பிறகும், வைபவ் 7 ரன்களில் இருந்தபோது ஆப்கான் வீரர்கள் மீண்டும் ஒரு கேட்ச்சை கோட்டை விட்டு அவருக்கு இரண்டாவது ஆயுளைக் கொடுத்தனர்.

மேலும் 3வது இன்னிங்சில் வைபவ் சூரிய வன்சி அடித்த பந்தை ஆப்கான் வீரர் பரிதூன் கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். மேலும் இரண்டு முறை சான்ஸ் கிடைத்த நிலையிலும் கிட்டத்தட்ட 38 ரன்கள்  மட்டுமே அந்த தொடரில் அவர் எடுத்து ஏமாற்றம் அளித்துள்ளார்.