மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளை சேர்ந்த ராணுவ உபகரண உற்பத்தி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சேர்ந்த தனியார் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், கூடுதல் செயலர் பங்கஜ் அகர்வால், உயர் அதிகாரிகள் மற்றும் மதிய பாதுகாப்புத்துறை செயலாளர் கிரிதர் அரமனே பலர் கலந்து கொண்டனர்.

அப்போது சர்வதேச பாதுகாப்பு சார்ந்த தொழில்களுக்கான மிகப்பெரிய உள்நாட்டு பாதுகாப்பு பொருட்களுக்கான சந்தையாக இந்தியா விளங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டார்ட் அப்  நிறுவனங்களுக்கான ஆரோக்கியமான சூழலை இந்தியா உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் உலக நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் பங்கெடுத்துக் கொள்ளலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தியை பொருத்தவரை நாடு தன்னிறைவு  அடைவதும் இரட்டை இலக்காக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அப்படி இந்தியாவில் பாதுகாப்பு உபகரண உற்பத்தியில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தமிழகம் மற்றும் உத்தர பிரதேசமும் ஊக்கத்தொகை வழங்குவதையும், பாதுகாப்பு உற்பத்தி துறையில் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தி வருவதையும் அமைச்சர் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். அதே சமயம் இந்தியாவில் தொழில் தொடங்கும் வெளிநாட்டு நிறுவனங்களை காக்கும் முறையில் சட்ட பாதுகாப்பு இருப்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய பாதுகாப்பு உற்பத்தியில் சர்வதேச முதலீடு பற்றிய தங்கள் கருத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்கள் செயல் அதிகாரிகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்ட அவர் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு தடையாக உள்ள அம்சங்களை நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என உறுதி அளித்துள்ளார்.