ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) வீரர் ரிங்கு சிங் செய்த மாயாஜால பீல்டிங் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், கொல்கத்தா அணி நிர்ணயித்த 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி விளையாடியது. அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த எய்டன் மார்க்ரம் 31 ரன்கள் எடுத்திருந்தபோது, கேமரூன் கிரீன் வீசிய பந்தை நேராக ‘லாங்-ஆன்’ திசையில் சிக்ஸருக்கு விளாசினார்.

 

அனைவரும் அது சிக்ஸர் என்று நினைத்த வேளையில், எல்லைக் கோட்டிற்கு அருகே நின்றிருந்த ரிங்கு சிங் காற்றில் எகிறி பந்தைப் பிடித்தார். தனது உடல் சமநிலை தப்பி எல்லைக் கோட்டிற்கு வெளியே செல்வதை உணர்ந்த அவர், சாமர்த்தியமாக பந்தை மேலே தூக்கி வீசிவிட்டு, கோட்டிற்கு வெளியே சென்று மீண்டும் மின்னல் வேகத்தில் உள்ளே வந்து பந்தைப் பிடித்து அசத்தினார்.

ரிங்கு சிங்கின் இந்த அசாத்தியமான ‘அக்ரோபாட்டிக்’ கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. ஒரு இக்கட்டான கட்டத்தில் லக்னோவின் முக்கிய விக்கெட்டை வீழ்த்த இது பெரும் உதவியாக அமைந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.