மும்பை மலாடு பகுதியில் தெருவோர வியாபாரி ஒருவர், தான் விற்பனைக்காக வைத்திருந்த வாழைப்பழம் மற்றும் மாதுளம் பழங்கள் மீது ‘ரேடோல்’ (Ratol) எனப்படும் வீரியமிக்க எலி மருந்தைத் தடவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் அந்த வழியாகச் சென்றவர்கள், அந்த வியாபாரியை முற்றுகையிட்டு சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். “குழந்தைகள் உண்ணும் பழத்தில் விஷத்தைத் தடவுகிறாயே?” என்று அவர்கள் ஆவேசமாகக் கேட்டபோது, “இவை அழுகிய பழங்கள், விற்பனைக்காக அல்ல” என்று கூறி அந்த வியாபாரி தப்பிக்க முயன்றுள்ளார்.

​இருப்பினும், அவரது வண்டியில் இருந்த மற்ற பழங்களிலும் அந்த நச்சுத் தன்மை வாய்ந்த மஞ்சள் நிறப் பசை தடவப்பட்டிருந்ததை மக்கள் கவனித்து வீடியோ எடுத்துள்ளனர். இந்த விவகாரம் மும்பை மாநகராட்சி (BMC) மற்றும் போலீஸாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, உடனடியாக அந்த வியாபாரியின் தள்ளுவண்டி பறிமுதல் செய்யப்பட்டு, அவர் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். எலி மருந்தில் உள்ள பாஸ்பரஸ் மனித உயிருக்கே உலை வைக்கக்கூடியது என்பதால், பழங்களை வாங்கும் முன் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறையினர் எச்சரித்துள்ளனர்.