பள்ளி மாணவிகள் இருவர் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு மாணவி மற்றொரு மாணவியிடம் பெயர் என்ன என்று கேட்பதில் தொடங்கிய சாதாரண உரையாடல், அடுத்த சில நிமிடங்களிலேயே ஒருவரையொருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக்கொள்ளும் அளவுக்கு விபரீதமாக மாறியது.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மாணவிகள், தங்களின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றித் தவறாகப் பேசியதால் ஆத்திரமடைந்து ஒருவரையொருவர் அறைந்தும், தள்ளியும் தாக்கிக்கொண்டனர். ​இந்தச் சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி விவாதப் பொருளாகியுள்ளது.

பலரும் இந்தச் சம்பவத்தை ஒரு ஒழுக்கக் குறைவாகப் பார்த்து வருத்தப்படும் வேளையில், மற்றொரு தரப்பு நெட்டிசன்கள் இதனை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு மீம்ஸ்களையும், கேலிகளையும் பகிர்ந்து வருகின்றனர். மாணவர்களிடையே குறைந்து வரும் ஒழுக்கம் மற்றும் பொது இடங்களில் நடந்து கொள்ளும் விதம் குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களின் கவலையைத் தெரிவித்து வருகின்றனர்.