குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாணக்யா தனியார் பள்ளியில், 10-ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் பலமாக அறைந்ததில், அந்த மாணவனின் காது சவ்வு கிழிந்து ரத்தம் கொட்டிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நிக்கோல் பகுதியில் உள்ள இப்பள்ளியில், 10-ஆம் வகுப்பு குஜராத்தி வழி கல்வி பிரிவு மாணவர்கள் உடற்கல்வி வகுப்பின் போது மைதானத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆங்கில வழி கல்வி பிரிவு ஆசிரியரான லக்ஷ்மண் என்பவர், தனக்குச் சம்பந்தமே இல்லாத அந்த 10-ஆம் வகுப்பு மாணவனை பளாரென கன்னத்தில் அறைந்துள்ளார்.

“>

இந்த அடியின் தாக்கத்தால் மாணவனின் இடது காது வீங்கி, ரத்தம் வடியத் தொடங்கியதோடு, அவனால் சரியாகக் காது கேட்கவும் முடியவில்லை. உடனடியாக பள்ளி நிர்வாகம் மாணவனின் தந்தைக்குத் தகவல் தெரிவிக்க, அவர் விரைந்து வந்து மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அதோடு மருத்துவப் பரிசோதனையில் மாணவனின் இடது காது சவ்வு கிழிந்திருப்பது உறுதியானது. அடுத்த ஒரு வாரத்திற்குள் காது வீக்கம் குறையவில்லை என்றால், அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தவறை ஒப்புக்கொண்ட ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மாணவனின் தந்தை கிருஷ்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், அகமதாபாத் மாவட்ட கல்வி அதிகாரி ரோஹித் சவுத்ரி உத்தரவின் பேரில், அந்த ஆசிரியர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒரு மாணவனின் எதிர்காலக் கேட்கும் திறனையே கேள்விக்குறியாக்கிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.