தமிழகத்தில் வெளிப்படையான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதாகத் தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், அவரது புதிய அலுவலகப் பணிகளுக்காக வெளியிடப்பட்ட டெண்டர் விவகாரம் தற்போது புதிய சர்ச்சையையும் ஊழல் புகார்களையும் கிளப்பியுள்ளது.

தமிழக முதலமைச்சரின் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக அந்தக் கட்டடத்தின் 10-வது தளம் முழுவதுமாக ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித்துறை மூலம் அதற்கான சீரமைப்புப் பணிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரமாக நடைபெற்று வந்தன. பணிகள் தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதியன்று பொதுப்பணித்துறை திடீரென ஒரு டெண்டரை வெளியிட்டுள்ளது. அதில், முதலமைச்சரின் அலுவலகத்திற்காக மூன்று தொகுதிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதன் மொத்த டெண்டர் மதிப்பு ரூ.5.54 கோடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை பொறியாளர்களின் நேரடி மேற்பார்வையில் கட்டுமான மற்றும் சீரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஒரு மாதமாக முழு வீச்சில் நடந்து வரும் சூழலில், பணிகள் முடிந்த பிறகோ அல்லது பாதியில் இருக்கும்போதோ டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

“>

 

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மாறாக, ஏற்கனவே நடந்து வரும் பணிகளுக்குப் பின் தேதியிட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலிருந்து கடும் விமர்சனங்களும் ஊழல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.