உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டம் இஜ்சத்நகர் பகுதியில், பள்ளி மாணவி ஒருவரை வழியிலேயே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் தவறாக தொடும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் நடந்து கொண்டிருந்த அந்த மாணவி, பள்ளி யூனிஃபார்ம்மில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அந்தவழியே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அந்த சிறுமியின் அருகே வந்து தவறான முறையில் தொட்டுவிட்டு தப்பி ஓடியது, அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து போலீசார்  அச்சம்பவம் குறித்து தீவிர நடவடிக்கை எடுத்தனர். அந்த விசாரணையில் இஜ்சத்நகர் போலீசார், குற்றவாளியை  அடையாளம் கண்டறிந்தனர்.

பின்னர் குற்றவாளியை முஸ்பிர் என்பவரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பி செல்ல முயற்சித்தார். உடனே போலீசார் அவரை  என்கவுண்டரில் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து எண் தகடில்லாத ஹீரோ ஸ்பிளெண்டர் பைக், 315 போர் துப்பாக்கி, ஒரு காலி கார்ட்ரிட்ஜி  மற்றும் 2 லைவ் கார்ட்ரிட்ஜ்  போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளி மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரேலி போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து மேலும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.