சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள போத்ரி பகுதியில், கட்டுமானப் பணியின் போது ஜேசிபி எந்திரத்தின் டயரில் காற்று நிரப்பும்போது ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த ஜூன் 18 அன்று போத்ரியில் உள்ள பார்ச்சூன் எலிமெண்ட்ஸ் கட்டுமான குடியிருப்பு பகுதியில் பஞ்சரான ஜேசிபி டயருக்குக் காற்று நிரப்பும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டயர் அதீத அழுத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்த வெடிப்பின் தாக்கம் எவ்வளவு பயங்கரமாக இருந்ததென்றால், டயரின் மீது அமர்ந்திருந்த ஊழியர்கள் சுமார் 10 முதல் 15 அடி தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஜேசிபி உதவியாளரான சிவம் சாஹு என்பவரின் தாடை முற்றிலும் சிதைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த மற்றொரு உதவியாளரான உமாகாந்த் கௌஷிக் என்பவரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

 

இந்த கோர விபத்தில் ஜேசிபி ஆபரேட்டர் ராகுல் யாதவ், மெக்கானிக் அஜய் நிஷாத் உள்ளிட்ட மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். டயர் வெடித்த வேகத்தில் அதன் இரும்பு டிஸ்க்  சுமார் 30 முதல் 40 அடி தூரத்திற்குப் பறந்து போய் விழுந்துள்ளது. இந்த ஒட்டுமொத்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரை உரைய வைத்துள்ளது.

மேலும் விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, தற்காலிகமாகக் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.