தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேது பாவாசத்திரம் வட்டாரத்தில் தற்போது விவசாயிகள் நிலக்கடலையை பரவலாக சாகுபடி செய்து வருகின்றனர். நிலக்கடலையை பொருத்தமட்டில் இளம் பயிர்களில் சுருள் பூச்சி தாக்குதல் மற்றும் சற்று வளர்ந்த பயிர்களில் புரடீனியா புழு தாக்குதல் இருக்கக்கூடும். இந்த தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண்மை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இந்த தாக்குதலை கட்டுப்படுத்த வயல்களில் இரவு 8 மணி முதல் 11 மணி வரை விளக்குப்பொறி வைத்து தாய் அந்து பூச்சியின் நடமாட்டத்தை கண்காணித்து தக்க பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதேபோல் சுருள் பூச்சியை கட்டுப்படுத்துவதற்கு டைகுளோர்வாஸ் 250 மில்லி லிட்டர் அல்லது குளோர் பைரிபாஸ் 500 மில்லி லிட்டர் அல்லது மானோகுரோட்டபாஸ் 300 மில்லி லிட்டர் இதில் ஏதேனும் ஒரு மருந்தினை 200l லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் கைத்தொளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். அதேபோல் புரடீனியா புழுக்களை கட்டுப்படுத்துவதற்கு வரப்புகளில் நெற்பயிராக ஆமணக்கு, மக்காச்சோளம், தட்டைப்பயிறு போன்றவற்றை விதைக்க வேண்டும். இதனால் தீமை செய்யும் பூச்சிகள் அழிந்து நன்மை செய்யும் பூச்சிகள் பெருக வாய்ப்பு உள்ளது.

மேலும் வயல்களில் உள்ள புழுக்களை தின்று அழிக்கும் விதமாக பறவைகள் வந்து அமர்வதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்க வேண்டும். அதேபோல் நிலக்கடலை மற்றும் நெற்பயிர்களின் நிலைகளில் உள்ள இளம் புழுக்களை கையால் எடுத்து நசுக்கி அளிக்க வேண்டும். மேலும் புரடீனியா தாய் அந்து பூச்சிகளுக்கு உண்டான இன கவர்ச்சி பொறியினை வயலில் நான்கு அல்லது ஐந்து இடங்களில் வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.