நாட்டில் அதிகரித்து வரும் தெருநாய்களின் எண்ணிக்கை மற்றும் நாய் கடி சம்பவங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தெருநாய்களை அகற்றுவதற்கான உத்தரவில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதுடன், நாய் கடிகள் மற்றும் அவற்றின் தாக்குதல்கள் கவலைக்குரிய விஷயமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின்படி, உள்ளூர் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி அமைப்புகள் தெருநாய்களைப் பிடித்து, அவற்றுக்குக் கருத்தடை செய்து, முறையான தடுப்பூசி போடவேண்டும். வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்ட ஆபத்தான நாய்கள் எக்காரணம் கொண்டும் மீண்டும் வெளியில் விடுவிக்கப்பட மாட்டாது என்றும், ஆபத்தான நடத்தை கொண்ட நாய்களைப் பராமரிக்கத் தனிப் புகலிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தெருநாய்களுக்குத் திறந்தவெளிகளில் உணவளிக்கக் கூடாது என்று தடை விதித்துள்ள நீதிமன்றம், தெருநாய்களுக்கென ஒரு ‘தேசியக் கொள்கை’ உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளின் அதிகாரப்பூர்வ பதிவுகளைப் பார்க்கும்போது நாட்டில் நாய் கடி சம்பவங்கள் மிக வேகமாக அதிகரித்து வருவது தெளிவாகிறது. இந்தியாவில் கடந்த 2022-ஆம் ஆண்டில் 21,89,909 நாய் கடி சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், 2023-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 30,52,521 ஆக உயர்ந்தது.

தொடர்ந்து 2024-ஆம் ஆண்டில் மட்டும் 37 லட்சத்திற்கும் அதிகமான (3.7 மில்லியன்) மெகா அளவிலான வழக்குகள் பதிவாகியுள்ளன. 2024-ஆம் ஆண்டு தரவுகளின்படி, மாநில அளவில் மகாராஷ்டிரா 4,85,345 வழக்குகளுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு 4,80,427 வழக்குகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இதற்கு அடுத்தபடியாகக் குஜராத்(3,92,837), கர்நாடகா (361,494) மற்றும் பீகார் (263,930) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கடந்த 2025-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மட்டுமே 4.25 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளது இந்த அபாயகரமான கிராஃபைக் காட்டுகிறது.