அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்த நிலையில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கதவுகளை ஓபிஎஸ் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கும் சூழலில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனை அடுத்து தொண்டர்கள் தன்னுடைய பக்கம் இருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக திருச்சியில் மிகப்பெரிய அளவில் மாநாடு நடத்தினார் ஓபிஎஸ். மேலும் தொடர்ந்து மண்டல அளவிலும் மாநாடுகளில் நடத்த அவர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இணைவதற்கு நான் தூது அனுப்பியதாக இபிஎஸ் கூறுவது பொய். இது போன்று அவர் தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். அண்டப் புழுகு, ஆகாச புழுகு என்பதற்கான சான்றாக அவர் செயல்படுகிறார் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். திருச்சி மாநாட்டுக்கு பின் தொண்டர்கள் மனநிலையில் மாற்றம் உள்ளது. அவர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கின்றனர் என்பதற்கு திருச்சி மாநாடு சான்றாக நிரூபணமாகி உள்ளது என தெரிவித்தார்.