புனே மாவட்டம் நஸ்ராப்பூர் பகுதியில் மூன்றரை வயது சிறுமி ஒருவரை முதியவர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கல்லால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடை விடுமுறைக்காக நஸ்ராப்பூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு அந்தச் சிறுமி வந்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை, பீம்ராவ் பிரபாகர் காம்ப்ளே (65)என்ற முதியவர், சிறுமிக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி அருகில் இருந்த மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். மாலை 4 மணி வரை சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த உறவினர்கள் தேடத் தொடங்கினர்.

கிராமத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த முதியவர் சிறுமியை அழைத்துச் சென்றது உறுதியானது. இதையடுத்து கிராம மக்கள் அவரைப் பிடித்து விசாரித்ததில், சிறுமியைக் கொலை செய்து உடலை சாணக் குவியலுக்கு அடியில் மறைத்து வைத்திருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். தற்போது வெளியாகியுள்ள சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குற்றவாளியின் கொடூர முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சிறுமி அலறாமல் இருப்பதற்காக, அவரது வாயில் சாக்ஸை (Socks) திணித்து அவர்  சித்திரவதை செய்துள்ளார். சிறுமியின் நெஞ்சுப் பகுதியில் காயங்கள் தழும்புகளாகக் காணப்படுகின்றன. உடல் முழுவதும் பலத்த காயங்கள் உள்ளன. பாலியல் வன்கொடுமை செய்த பிறகு, சிறுமியின் தலையில் கல்லால் அடித்து அவர் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பீம்ராவ் காம்ப்ளே ஒரு தொடர் குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் மீது ஏற்கனவே 1998 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தக் குற்றங்களுக்காக அவர் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அனுபவித்துள்ளார். அவரது மோசமான நடத்தை காரணமாக சொந்த ஊரான சால்வடே கிராம மக்கள் அவரை ஊரை விட்டே ஒதுக்கி வைத்துள்ளனர். நஸ்ராப்பூர் சந்தைப் பகுதியில் கூலி வேலை செய்து கொண்டு அவர் வசித்து வந்துள்ளார்.

குற்றவாளியைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கொடூரச் செயலில் அவருக்கு வேறு யாராவது உதவினார்களா? சிறுமியைக் கொல்லப் பயன்படுத்திய ஆயுதங்கள் எங்கே? குற்றவாளிக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் பாலியல் திறன் சோதனைகள் நடத்தப்பட உள்ளன. இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு எதிராக மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளதோடு, குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.