மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் நேற்று காலை நடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்காக, புதன்கிழமை காலை அவர் பாராமதிக்கு சிறிய ரக விமானத்தில் பயணம் மேற்கொண்டார். காலை சுமார் 8.45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, விமானம் எதிர்பாராதவிதமாகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதில் விமானம் தரையில் மோதி வெடித்துச் சிதறியதில், துணை முதல்வர் அஜித் பவார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தக் கோர விபத்தில் அஜித் பவாருடன் பயணித்த அவரது பாதுகாவலர் விதீப் யாதவ், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி மற்றும் விமானிகள் சுமித் கபூர், ஷாம்பவி பதக் ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், விமானம் தரையில் மோதிய அடுத்த நொடியே ராட்சதத் தீப்பிழம்பு எழுந்து, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருப்பது காண்போரை உறைய வைக்கிறது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் பவாரின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.