மத்திய கிழக்கு பகுதியான ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் துறைமுகங்களுடன் தொடர்புடைய அனைத்து கப்பல்களையும் குறிவைத்து தாக்கும் திட்டத்தில் உள்ளதாக அதிர்ச்சியளிக்கும் மிரட்டலை விடுத்துள்ளனர். இந்த தகவலை, ஹவுதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நேரடியாக வெளியிட்ட வீடியோவில் உறுதி செய்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “தங்களது எச்சரிக்கையை புறக்கணிக்கும் நிறுவனங்களின் கப்பல்களை ஹவுதி போராளிகள் தாக்காமல் இருக்க மாட்டார்கள். இது ஒரு நேரடி எச்சரிக்கை. இஸ்ரேல் காசாவில் தொடர்ச்சியாக நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராக, சர்வதேச நாடுகள் கூடிய அழுத்தத்தை வழங்க வேண்டும். இல்லையெனில், எங்களது நடவடிக்கைகள் நீடிக்கப்படும்,” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது, “இஸ்ரேல் காசாவில் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை நிறுத்தினால், நாங்களும் உடனடியாக எங்களது நடவடிக்கையை நிறுத்தத் தயார். நாங்கள் போராட்டத்தை எப்போதும் மனிதநேய அடிப்படையில் நடத்துகிறோம். நமது நோக்கம், அடக்குமுறைகளை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை உறுதி செய்வதே,” என்றார்.

“>

 

இந்த அறிக்கையால் சர்வதேச சரக்குக் கப்பல்களுக்கு பாதுகாப்பு மீதான பெரும் கவலை எழுந்துள்ளது. ஏற்கனவே ரெட் சீ மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக, பல நிறுவனங்கள் தங்கள் கப்பல்களை வேறு பாதைகளில் செல்ல வழிமாற்றி வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் மேலும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.