திருமண விருந்து நேரத்தில் இனிப்பு பற்றாக்குறை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி, இரண்டு குடும்பங்களும் மோதிக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் நவம்பர் 29-ஆம் தேதி புத்த கயாவின் ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இச்சம்பவத்துக்கான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறும் வேளையில் ரசகுல்லா இனிப்பு குறைவாக இருந்தது. இதைத் தொடர்ந்து மணமகன் மற்றும் மணமகள் தரப்பினரிடையே வாக்குவாதம் தொடங்கி, சில நிமிடங்களில் அது தீவிர கைகலப்பாக மாறியது.

சிசிடிவி காட்சிகளின்படி, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கால் வாரியும், குத்தும், நாற்காலிகளை எறிதலும், கைகளில் கிடைத்த பாத்திரங்கள் உள்ளிட்டவற்றால் தாக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மோதலில் பலர் காயமடைந்தனர். திருமண சடங்குகளில் பெரும்பாலானவை — மாலை மாற்றுதல் உள்ளிட்டவை — ஏற்கனவே முடிந்திருந்தன. எனினும்,
இனிப்பு பற்றிய தகராறு நிலைமையை மோசமாக்கி, இறுதியில் திருமணமே ரத்து செய்யப்படும் சூழ்நிலைக்கு தள்ளியது.

 

மணமகனின் தந்தை மகேந்திர பிரசாத் கூறுகையில்: “இது சாதாரண ரசகுல்லா பிரச்சனையில்தான் தகராறு ஆரம்பமானது. ஆனால் மணமகள் தரப்பு, நாங்கள் வரதட்சணை கேட்டதாக பொய்யாக புகார் அளித்துவிட்டனர்,” என்று குற்றம் சாட்டினார். அவரது கூற்றுப்படி, வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகும் அவர்கள் திருமணத்தை தொடரத் தயாராக இருந்தனர். ஆனால் மணமகள் தரப்பு எந்த வகையிலும் இணங்கவில்லை என்றார்.

ஆனால் மணமகனின் தாயார் முன்னி தேவி வேறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்: அதாவது “உடன்பாட்டை எட்ட முயற்சித்த போது, மணமகள் குடும்பத்தினர் திருமண நகைகளை எடுத்துக்கொண்டு, மணமகளுடன் ஹோட்டலை விட்டு வெளியேறிவிட்டனர்,” என்று அவர் கூறுகிறார். திருமணத்திற்காக ஹோட்டலை முன்பதிவு செய்தவர்களும், இன்னும் திருமணத்திற்கு தயாராக இருப்பது மணமகன் தரப்பின் நிலைப்பாடு. ஆனால் மணமகள் தரப்பு உறுதியாக மறுத்துவிட்டதால் முடிவில் உறவு முறிந்தது என்றார். மேலும் இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.