திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கரிமேடு கிராமத்தில் சிட்டியம்மாள்(53) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சிட்டியம்மாளும் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் நட்பாக பழகி வந்தனர். நேற்று காலை வெங்கடேசன் சிட்டியம்மாளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு உணவு கொண்டு வருமாறு அழைத்தார். இதனால் சிட்டியம்மாள் உணவு எடுத்துக் கொண்டு வெங்கடேசனுக்கு கொடுப்பதற்காக சென்றார்.

அப்போது மூர்த்தி என்ற விவசாயி தனது வயலில் பயிரிட்ட வேர்க்கடலை பயிரை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிட்டியம்மாவின் கால் பட்டது. இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிட்டியம்மாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.