ஹரியானாவைச் சேர்ந்த 70 வயது முதியவர் பலே ராம், தனது குடும்பத்துடன் ஜெய்சால்மரில் பாபா ராம்தேவ் தரிசனத்திற்காக வந்திருந்தார். இந்நிலையில் ரயில் நிலையத்தில் அவருக்கு சர்க்கரை அளவு குறைந்து உடல்நிலை மோசமடைந்தது. அப்போது, தனது நண்பரை வழியனுப்ப வந்த இளைஞர் சுபம், முதியவரை உடனடியாக தனது மோட்டார் சைக்கிளில் அமரவைத்து, அவரது மகனுடன் மருத்துவமனைக்கு விரைந்தார். முதியவரின் நிலையைக் கருதி, வண்டியை நிறுத்தாமல் நேராக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றார்.

இந்த சம்பவம் ‘நண்பன்’ படத்தில் விஜய் ஜீவாவின் தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சியை நினைவூட்டியது. இந்த நிகழ்வு வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி, சுபமின் துணிச்சலான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகமும், சுபம் சரியான நேரத்தில் செயல்பட்டதால் முதியவரின் உயிர் காப்பாற்றப்பட்டதாக கூறியுள்ளனர்.