கடந்த வருடம் நவம்பர் 26, 2022 அன்று ஏர் இந்தியாவின் வணிக வகுப்பில் பயணம் செய்த பெண் ஒருவர் மீது போதையில் இருந்த ஆண் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. விமானத்தில் கேபின் விளக்குகள் அணைக்கப்பட்ட போது அந்த நபர் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. அதன் பின் அந்தப் பெண்ணின் பை, காலனிகள் மற்றும் உடைகள் சிறுநீரில் நனைந்து இருந்தது. அதனால் தனக்கு பைஜாமாக்கள் மற்றும் செருப்புகள் வழங்கப்பட்டதாகவும் தன்னுடைய இருக்கைக்கு அவரை திரும்பும் படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விமானத்தில் இருந்து தரை இறங்கிய பின் அந்த நபரை சுதந்திரமாக நடமாட விமான குழுவினர் அனுமதித்ததாகவும் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.  இது குறித்து விமான நிறுவனம் ஒரு குழுவை அமைத்து அந்த பயணி இனி எந்த விமானத்திலும் பயணிக்க முடியாத தடைக்கு பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து தற்போது இந்த விவகாரம் அரசு ஆய்வு குழுவிடம் உள்ளது. குழுவின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் விமான நிறுவனத்தால் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்ட பின் ஏர் இந்தியா என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.