ஆந்திராவில் நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைக்கும்போது 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் பாலநாடு மாவட்டம் நரசராவ்பேட்டையில் நடிகர் சூர்யா பிறந்த நாளுக்காக பேனர் கட்டிய 2 கல்லூரி மாணவர்கள் பலியாகியுள்ளனர். பேனர் கட்டும்போது இரும்பு கம்பி அருகில் இருந்த மின்கம்பி மீது உரசியதில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (இன்று) சூர்யாவின் பிறந்தநாளுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக நரசராவ்பேட்டை நகரில் இளைஞர்கள் இருவரும் சனிக்கிழமை இரவு ஃப்ளெக்சை வைத்துக்கொண்டிருந்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

போலீசார் கூறியதாவது, ஃப்ளெக்சின் இரும்பு கம்பி ஒன்று மேல்நிலை மின்சார கம்பியில் சிக்கியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் என். வெங்கடேஷ் மற்றும் பி.சாய் ஆகிய இருவரும் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நரசராவ்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.