மத்தியப் பிரதேச மாநிலம் டாடியாவில், காவல் துறையினரின் ஆபாச நடனம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, இரண்டு போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த காணொளியில், டாடியா சிவில் லைன் காவல் நிலையத்தில் பணியாற்றும் ASI சஞ்சீவ் கவுர், இரண்டு பெண் நடனக்கலைஞர்களுடன் பாலிவுட் பாடலுக்கு ஆபாசமாக நடனமாடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

தகவலின்படி, இந்த வீடியோ செப்டம்பர் 2ஆம் தேதி, கான்ஸ்டபிள் ராகுல் பவுத்தின் பிறந்தநாள் விழாவில் நடைபெற்ற நிகழ்வின் போது படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த விருந்து, டாடியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றதாகவும், பார் டான்சர்கள் நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.

 

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, டாடியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூரஜ் வர்மா, சம்பந்தப்பட்ட ASI சஞ்சீவ் கவுர் மற்றும் கான்ஸ்டபிள் ராகுல் பவுத் ஆகியோருக்கு உடனடி இடைநீக்கம் வழங்க உத்தரவிட்டுள்ளார். விசாரணை நிலுவையில் உள்ளதால், அவர்கள் பணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து  எஸ்.பி. சூரஜ் வர்மா கூறியதாவது: காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் மன்னிக்கமுடியாது. இப்படியொரு தவறான நடத்தை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. முடிவுகள் வெளியாகும் போது, சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.