தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் பிப்ரவரி 20ஆம் தேதி நாளை தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் மயில்சாமியின் மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார். நேற்று இரவு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் அவரின் உயிர் இன்று அதிகாலை பிரிந்தது. இவருக்கு வயது 57. நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர். இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் உடலுக்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மயில்சாமியின் உடல் நாளை காலை 10 மணிக்கு சென்னை வடபழனி ஏவிஎம் சுடுகாட்டில் நடைபெறும் இறுதிச் சடங்கு பிறகு உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.