புதுக்கோட்டை அன்னவாசல் ஒன்றியம் இறையூர் கிராமத்திலுள்ள வேங்கை வயல் பகுதியில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரமானது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு சென்ற 27-ஆம் தேதி அந்த கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பட்டியலினத்தை சேர்ந்த மக்களை அங்குள்ள அய்யனார் கோயிலில் வழிபட அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

அதன்பின் அவர்களை கலெக்டர் கவிதா ராமு கோவிலுக்கு அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தார். இதேபோன்று அங்குள்ள டீக்கடையில் இரட்டைக்குவளை முறை பயன்பாட்டில் இருந்தை பார்த்து அந்த கிராமத்தில் தீண்டாமை வன் கொடுமை இருப்பதை கலெக்டர் உறுதி செய்தார். இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட இறையூர் கிராமத்தை சேர்ந்த சிங்கம்மாள் மற்றும் டீக்கடை உரிமையாளர் மூக்கையா போன்றோர் சாதிய பாகுபாடு காட்டியதாக வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து டைரக்டர் பா.இரஞ்சித் தன் சமூகவலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவற்றில் “வன்கொடுமைகள் எதிர்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதிதிராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனித்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள். தொடரும் சமூக அநீதி. புதுக்கோட்டை வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி விசாரணை எனும் பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.