ஈரானுடனான மூன்று வார கால மோதல் அமெரிக்காவிற்கு சாதகமாக முடிவுக்கு வந்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அணுஆயுதங்களை இனி எப்போதும் உருவாக்குவதில்லை என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அந்நாடு தற்போது புதிய ஒப்பந்தம் ஒன்றிற்கு தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், ஈரானுடன் விரிவான ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்காவின் உயர்மட்டக் குழு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இக்குழுவில் முக்கிய  தலைவர்கள் இடம்பெற்றுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதன்படி  ஜே.டி. வான்ஸ் (துணை அதிபர்), மார்கோ ரூபியோ, ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஆகும்.

பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ஈரான் வழங்கிய “பரிசு” குறித்து விவரித்த டிரம்ப், அது அணுஆயுதம் சார்ந்தது அல்ல என்றும், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான மிகவும் மதிப்புமிக்க ஒன்று என்றும் தெளிவுபடுத்தினார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதலைத் தீர்க்கவும், பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காகப் பேச்சுவார்த்தைகளைத் தனது நாட்டில் நடத்தவும் அவர் முன்வந்துள்ளார். ஷெரீப்பின் இந்த முயற்சிக்கு அதிபர் டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப், “இந்தப் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டது” என முழங்கினார்.

ஈரானின் அணுஆயுத்தத் திறனை அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக அழித்துவிட்டன. இதன் மூலம் இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு இருந்த மிகப்பெரிய அச்சுறுத்தல் நீக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார். அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்செத் இது குறித்துக் கூறுகையில், “நவீன வரலாற்றில் ஈரானுக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கை மிகவும் வலிமையானது. ஈரானின் ராணுவம் மிக விரைவாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

டிரம்பின் இந்த அறிவிப்புகள் உண்மையாகும்பட்சத்தில், அமெரிக்கா – ஈரான் இடையிலான உறவில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக அமையும். அணுஆயுதத் தடை மற்றும் பிராந்திய அமைதி ஒப்பந்தங்கள் ஏற்பட்டால், மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நிலவி வரும் பதற்றம் தணிய வாய்ப்புள்ளது. எனினும், ஒப்பந்தத்தின் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படாததால், சர்வதேச சமூகம் இதனை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.