நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய பேரிடர் மீட்பு குழுவினர் “ஆபரேஷன் தோஸ்த்” என்னும் பெயரில் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்படுகிறது. அந்த வகையில் உணவு பொருட்கள், போர்வைகள், மருந்துகள் என ஏராளமான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏராளமான நிவாரண பொருட்களுடன் ஏழாவது இந்திய விமானப்படை விமானம் நேற்று இரண்டு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் அவசரகால மருந்துகள் மற்றும் சோலார் விளக்குகள் உட்பட 35 டன் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சிரியா தலைநகர் டமாக்சுக்கு 23 டன் பொருட்கள் மற்றும் துருக்கிக்கு 12 டன் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்தியா அனுப்பிய பொருட்களை டமாகசில் அந்த நாட்டு உள்ளாட்சி மற்றும் சுற்றுச்சூழல் துறை துணை மந்திரி மவுதாஸ் டவாஜி வாங்கிக் கொண்டார். மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இந்த தகவலை கூறியுள்ளார்.