துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. மேலும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் திரும்பிய இடமெல்லாம் பிணக்குவியலும் மர்ம ஓலங்களும் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகளும் மட்டுமே காண முடிகின்றது. மலை போல் குவிந்து கிடக்கும் கட்டிட ஈடுபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் மக்களை மீட்பதற்காக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். இந்த பணியில் இந்தியா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இரு நாடுகளிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34000 ஆயிரத்தை கடந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் துருக்கி நாட்டில் நேற்று நள்ளிரவு 12.03 மணிக்கு காஹ்ராமன்மராஸ் நகரின் தென் கிழக்குப் பகுதியில் 24 கிலோமீட்டர் தொலைவில் 15.7 கி.மீ ஆழத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதி கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியது. இதில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதிகளில் உள்ள மக்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் வீரர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.