தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு மற்றும் முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் ஒன் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த வருடம் முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வீதம் இரண்டு வருடங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற்ற நிலையில் முதலமைச்சர் திறனாய்வு தேர்வு அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்றது. இந்த இரண்டு தேர்வுகளுக்கான தற்காலிக விடை குறிப்புகளை தேர்வுத்துறை தற்போது வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் ஏதாவது ஆட்சேபனைகள் இருந்தால் அதன் விவரங்களை உரிய ஆதாரங்களுடன் அக்டோபர் 27ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.