பெங்களூரு மடிவாலா காவல் எல்லைக்கு உட்பட்ட ‘சந்தியா தியேட்டரில்’ அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு தெலுங்கு திரைப்படமான ‘நுவ்வு நாக்கு நச்சாவ்’ மறுவெளியீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திரையிடலின் போது பெண்கள் கழிவறைக்குச் சென்றுள்ளனர். அப்போது கழிவறையின் உள்ளே ரகசிய கேமரா வைக்கப்பட்டிருப்பதை ஒரு பெண் தற்செயலாகக் கவனித்து மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பொழுதுபோக்கிற்காக வந்த இடத்தில் இப்படியொரு அநாகரீகமான செயல் நடந்ததைக் கண்டு அங்கிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.

கேமரா கண்டுபிடிக்கப்பட்டவுடன் உஷாரான பொதுமக்கள், அந்த ரகசிய கேமராவை அங்கு வைத்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரைச் சூழ்ந்து பிடித்துள்ளனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த இளைஞருக்கு அங்கேயே ‘தர்ம அடி’ கொடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மடிவாலா போலீசார் அந்த இளைஞரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இந்தச் சூழல் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும், தியேட்டர் நிர்வாகத்தின் மீது கடும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.