தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி டைரக்டராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள இவர் இப்போது விஜய் நடிப்பில் உருவாகும் “லியோ” படத்தை இயக்கி வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் முதல்கட்ட சூட்டிங் காஷ்மீரில் நடந்து முடிந்தது. இதையடுத்து லியோ படத்தின் சென்னை சூட்டிங் மே 1 முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு ஒருமாத காலம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அண்மையில் டைரக்டர் விக்னேஷ் சிவனிடம் லியோ படத்தில் பாடல்கள் எழுதுவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. எனினும் அதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன், இதுவரையிலும் லியோ படத்திலிருந்து என்னை யாரும் பாடல் எழுத அழைக்கவில்லை. ஒரு வேளை அழைத்தால் கண்டிப்பாக எழுதுவேன் என்று தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படத்தில் 2 பாடல்களை எழுதி உள்ளார்.