தமிழக சட்டப்பேரவையில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை,சிறப்பு திட்ட செயலாக்கு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தை காண அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாயார் துர்கா ஸ்டாலின், மனைவி கிருத்திகா, மகள் தன்மையா ஆகியோர் சட்டமன்றத்திற்கு வந்தனர். அப்போது சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வரலாற்றில் வடக்கிலிருந்து இங்கு வந்து எப்போதும் யாரும் வெற்றி பெற்றது கிடையாது. அதனைப் போலவே வடக்கில் இருந்து இங்கு வந்து வெற்றி பெறலாம் என தற்போது சிலர் நினைக்கின்றனர்.

ஆனால் அது ஒருபோதும் நடக்காது. அவர்களின் விளையாட்டு தமிழகத்தில் எப்போது ஈடுபடாது. எங்களின் அணிக்கு கேப்டனாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உள்ளார். எப்போதுமே அடித்து ஆட வேண்டும். எப்போதும் முன்னேறி சிக்சர் அடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவர் எங்கள் தலைவர் கலைஞர் தான். எனவே ஆன்லைன் சூதாட்டம் தடுப்பு மசோதா மற்றும் டெல்டா நிலக்கரி சுரங்கம் தடுப்பு என தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை அடித்தது தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமையுடன் பேசி உள்ளார்.