தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வருகின்ற மே 1ஆம் தேதிக்குள் பாடங்களை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற்றது. இதனால் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு பாடங்களை வருகின்ற மே 1ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர் சேர்க்கை காரணமாக பேராசிரியர்கள் பாடங்களை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முழுமையாக நடத்த முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு மே 1ஆம் தேதிக்குள் பேராசிரியர்கள் பாடங்களை நிறைவு செய்ய தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதற்காக அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தலாம் எனவும் தேவை இருந்தால் கூடுதல் நேரங்களில் வகுப்புகள் எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.