சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணி அளவில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை திரிகோணமலையிலிருந்து கிழக்கு தென் கிழக்கே சுமார் 670 கிலோ மீட்டர் தொலைவிலும் காரைக்காலில் இருந்து கிழக்கு தென் கிழக்கே சுமார் 850 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது 31.1.2023 அன்று மேற்கு வட மேற்கு திசையிலும் அதன் பின் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து 1.22023 அன்று காலை இலங்கை கடற்பகுதிகளை கடக்க கூடும். இதனால் 30.1.2023 அன்று தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் 1.2.2023 அன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

வட தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓர் இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.