மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து விளக்கம் அளித்து அவர் கூறியதாவது, அரசியல்வாதிகள் செல்லாத இடங்களுக்கு கூட மக்களை தேடி மருத்துவம் திட்டம் சென்றடைந்துள்ளது. தமிழக அரசால் இந்த திட்டத்திற்கு 85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் பயனாளிகளின் பட்டியலை வெளியிட தயார் என மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மத்திய அரசால் பாராட்டப்படும் ஒரு திட்டம் மக்களை தேடி மருத்துவம் திட்டம் ஆகும். இதனை எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார் என அமைச்சர் கூறியுள்ளார். அ.தி.மு.க இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி மக்களை தேடி மருத்துவத் திட்டத்தில் தவறான புள்ளி விவரங்களை தந்தது கண்டிக்கத்தக்கது என கூறியிருந்தார். மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும் நோயாளிகளுக்கு தொடர்ந்து மருந்துகள் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.