தகைசால் தமிழர் திரு. சங்கரய்யா அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரப் போராட்ட தியாகியும் மிகச்சிறந்த பொதுவுடமைத் தலைவராகவும் திகழும் நம் மரியாதைக்குரிய திரு. சங்கரய்யா அவர்களுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு “தகைசால் தமிழர்” என்ற விருதினை வழங்கி கௌரவித்தது.

இன்று 102 வது பிறந்தநாள் காணும் பெரியவர் திரு. சங்கரய்யா அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற பொழுது ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் காரணமாக அவர் கல்லூரி தேர்வினை எழுத முடியவில்லை. இந்திய விடுதலை பெறுவதற்கு 12 மணி நேரங்களுக்கு முன்பாக தான் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது வரலாறு.

ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்த வரும் ஒரு மிகச்சிறந்த சுதந்திர போராட்ட தியாகியுமான திரு சங்கரய்யா அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் மரியாதைக்குரிய திரு சங்கரய்யா அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.