நேற்று சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய பரபரப்பான போட்டியில், சென்னை அணி 204 ரன்கள் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன்பே சிஎஸ்கே-வின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த ஒரு புகைப்படம் ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

நடிகர் தளபதி விஜய்யின் கட்சி விழாவில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு காவலர், சிஎஸ்கே வீரர் அன்ஷுல் கம்போஜ் போலவே இருந்ததைப் பார்த்த அஸ்வின், “கடமை முக்கியம் தான், ஆனா இன்னைக்கு மேட்ச் இருக்கு அன்ஷுல்.. சீக்கிரம் கேப் பிடிச்சு சேப்பாக்கத்துக்கு வா!” என விளையாட்டாகப் பதிவிட்டிருந்தார். ​அஸ்வினின் இந்த ‘குறும்பு’ பதிவால் பதறிப்போன ரசிகர்கள், நிஜமாகவே அன்ஷுல் கம்போஜ் தான் அங்கே இருக்கிறாரா எனத் தேடத் தொடங்கிவிட்டனர்.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த சிஎஸ்கே நிர்வாகம், அன்ஷுல் மைதானத்தில் பயிற்சியில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு, “கவலைப்படாதீங்க அஸ்வின், அன்ஷுல் இங்கே தான் இருக்கிறார்” எனப் பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தது. ஹரியானாவைச் சேர்ந்த இந்த இளம் வேகப்பந்து வீச்சாளர், நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே-வுக்காக அபாரமாகப் பந்துவீசி வரும் நிலையில், அஸ்வினின் இந்த கலாட்டா பதிவு இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.