ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், விராட் கோலியின் சாதுர்யமான ஒரு செயல் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியக்க வைத்துள்ளது.

கடந்த போட்டியில் 250 ரன்களுக்கு மேல் குவித்து மிரட்டிய டெல்லி அணி, ஆர்சிபி-க்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 75 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இந்த வீழ்ச்சிக்கு ஆர்சிபி பந்துவீச்சாளர்களின் திறமையை விட, விராட் கோலி ஆடுகளத்தை (Pitch) நுணுக்கமாகக் கவனித்துக் கொடுத்த ஆலோசனையே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

புவனேஷ்வர் குமார் வீச்சில் விக்கெட்டுகள் சரிந்தபோது, ஆடுகளத்தின் அருகே சென்று பிட்ச் எங்குத் திரும்புகிறது, எந்த இடத்தில் பந்து பட்டால் பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்து என்பதை விராட் கோலி கச்சிதமாகக் கணித்தார்.

குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை அழைத்து, பந்தை எங்கு லென்த் செய்ய வேண்டும் என்று ஆடுகளத்திலேயே விராட் சுட்டிக்காட்டினார். கேப்டனாக இல்லாவிட்டாலும், ஒரு அனுபவ வீரராக அவர் கொடுத்த அந்த “டிப்ஸ்” உடனடியாக மேஜிக் செய்தது. விராட் சொன்ன அதே இடத்தில் பந்தை வீசிய ஹேசில்வுட், அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே அதிரடி வீரர் கே.எல். ராகுலை காலி செய்தார்.

“>

டெல்லி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் எனத் தடுமாறிய அந்த 20 நிமிடங்கள், விராட்டின் ஆதிக்கமாகவே அமைந்தது. 20 ஓவர்களில் 75 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி அணி, புள்ளிப் பட்டியலில் பெரும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், விராட் கோலியின் இந்த “பிட்ச் ரீடிங்” வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.