பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் வன்முறைகளும் மனித உரிமை மீறல்களும் உலக அளவில் மீண்டும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பலுசிஸ்தானில் அப்பாவி சிறுமி ஒருவரைச் சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் ராணுவத்தினர், ஹமாஸ் பாணியில் அவரது உடலைக் கவச வாகனத்தின் முன்பகுதியில் கட்டி வீதிகளில் ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ ஒன்று எக்ஸ் (X) தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

பலுசிஸ்தான் தாங்கள் சுதந்திரமாகிவிட்டதாக அறிவித்த சில வாரங்களுக்குள் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஜூலை 5 அன்று தொடங்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் பெயரால், பாகிஸ்தான் அரசு இதுவரை பலுசிஸ்தானில் குறைந்தபட்சம் 88 பேரைக் கொன்று குவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான இந்த ராணுவ அடக்குமுறைகள் அப்பகுதி மக்களைக் கடுமையான அச்சத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளன.

 

இதற்கிடையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ரவாலகோட் பகுதியில் திங்கள்கிழமை அன்று புதிய வன்முறை வெடித்தது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட காஷ்மீர் மக்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடந்த இரண்டு நாட்களில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த அடக்குமுறையை நியாயப்படுத்திய பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை இந்தியாவைப் போன்ற “எதிரிகள்” என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் வைரலான வீடியோ ஒன்றில் பேசிய அவர், “ஆசாத் காஷ்மீர் போராட்டக்காரர்களை நான் இந்தியாவுடன் ஒப்பிடுகிறேன், அவர்களையும் இந்தியாவைப் போலவே எதிரிகளாகக் கருதுகிறேன்” என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். பலுசிஸ்தானில் அப்பாவி சிறுமி மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலும், காஷ்மீர் பகுதியில் போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையும் பாகிஸ்தான் அரசின் மனித உரிமை மீறல்களை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.