தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் பர்சானா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜ்மிரி பேகம் (28) என்ற மருமகள் இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவிய நிலையில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை பர்சானா தன் மருமகளிடம் டீ போட்டு தருமாறு கேட்டுள்ளார். அதற்கு மருமகள் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் தகறாறு முற்றியது. அப்போது ஆத்திரத்தில் பர்சானா தன் மருமகளை துணியால் கழுத்தை நெரித்து கொன்றார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பர்சானாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
