இமயமலை தொடரில் காஷ்மீரில் இயற்கையாக உருவாகும் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருவார்கள். கடல் மட்டத்திலிருந்து 12 ஆயிரத்து 800 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த குகை கோவிலுக்கு நடப்பு ஆண்டு செல்வதற்கான யாத்திரை, வருகிற ஜூலை 1-ம் தேதியில் இருந்து துவங்கி ஆகஸ்டு மாதம் 31-ம் தேதி வரை நடக்கவுள்ளது. கடந்த வருடம் நடந்த யாத்திரையின்போது உடல் உபாதைகள், ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சனைகளால் 42 பக்தர்கள் உயிரிழந்தனர்.

இந்த ஆண்டு யாத்திரையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு உணவு கட்டுப்பாடுகளை அமர்நாத் யாத்திரை வாரியம் பிறப்பித்துள்ளது. அதேபோன்று பக்தர்கள் கண்டிப்பாக அசைவ உணவு சாப்பிடக்கூடாது. மது, புகையிலை பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமர்நாத் யாத்திரை தொடங்க இருப்பதை முன்னிட்டு காஷ்மீரில் முழுவீச்சில் பாதுகாப்பு பணிகள் நடந்து வருகிறது. யாத்திரைக்கு வரக்கூடிய பக்தர்கள் எது குறித்தும் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.