உடற்பயிற்சி கூடத்தில் அதிக எடையுள்ள பளுவைத் தூக்கிய 27 வயது இளைஞர் ஒருவருக்குத் திடீரென ஒரு கண்ணில் பார்வை பறிபோன அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவருக்குத் கண் வலி அல்லது சிவப்பு நிறமாக மாறுதல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென பார்வை மங்கியதால் அவர் மருத்துவர் ஆஷிஷ் மார்கனை அணுகினார்.

பரிசோதனையில், அவருக்கு ‘வல்சால்வா ரெட்டினோபதி’ என்ற அரிய வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மருத்துவர் கண்டறிந்தார். அதிக எடையைத் தூக்கும்போது மூச்சைப் பிடித்துக் கொண்டு அதீத அழுத்தம் கொடுப்பதால், கண்ணின் விழித்திரையில் உள்ள நுண்ணிய இரத்தக் குழாய்கள் வெடித்து இரத்தக்கசிவு ஏற்படுவதே இந்தப் பாதிப்புக்குக் காரணமாகும்.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிற்குப் பிறகு, அறுவை சிகிச்சை ஏதுமின்றி சுமார் ஆறு முதல் எட்டு வாரங்களில் அந்த இளைஞரின் பார்வை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. அதிக எடை கொண்ட பயிற்சிகளைச் செய்யும்போது முறையான சுவாச நுட்பங்களைப் பின்பற்றுவது மிக அவசியம் என்றும், மூச்சைப் பிடித்துக் கொண்டு அதிக சிரமம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உடற்பயிற்சியின் போது திடீரெனப் பார்வையில் மங்கலோ அல்லது நிழல் போன்ற கருப்புப் புள்ளிகளோ தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நிரந்தரப் பாதிப்புகளைத் தவிர்க்க உதவும்.