ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஒரு ரூஃப்டாப் கஃபேயில், ஐஐடி ஜோத்பூர் மாணவர்கள் தங்களை இந்தியர்கள் என்பதால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியதால் பெரும் சர்ச்சை எழுந்தது. சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோவில், மாணவர்கள் கஃபே உரிமையாளரிடம் ஃபோனில் பேசி, தங்களை இந்திய மாணவர்கள் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு பாக்கர் கான் என்ற நபர், “வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி, இந்தியர்களுக்கு இல்லை” என்று பதிலளித்தார். இது கஃபேயின் கொள்கை என்று கூறி, மேற்கொண்டு எந்த விளக்கமும் அளிக்க மறுத்துவிட்டார்.
இந்த சம்பவம் ஜோத்பூரின் குலாப் சாகர் பகுதியில் உள்ள டைலன் கஃபேயில் நடந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ வைரலானதால், பலரும் கஃபே மீது பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டினர். இன்ஸ்டாகிராமில் @theindianidiot என்ற பக்கம் இந்த வீடியோவை பகிர்ந்து, கஃபே இந்தியர்களை அனுமதிக்கவில்லை, வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று உரிமையாளர் கூறியதாக தெரிவித்தது. இதனால், பலர் பாகுபாட்டுக்கு எதிரான சட்டங்களை மேற்கோள் காட்டி, அதிகாரிகள் இதை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி பலரும் கோபத்தையும், ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் கஃபேயை புறக்கணிக்க வேண்டும் என்று கூற, மற்றவர்கள் முழு உண்மை தெரியும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஒரு பயனர், “இந்தியர்களை அனுமதிக்கவில்லை என்றால், இந்தியாவில் ஏன் கஃபே திறந்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். மற்றொரு பயனர், மும்பையில் உள்ள ஒரு பிரபலமான கஃபேயில் தனக்கும் இதேபோன்ற அனுபவம் ஏற்பட்டதாகவும், வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.
