ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கம்பீரமாக ‘சூப்பர்-8’ சுற்றுக்குள் நுழைந்தது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் இழந்த இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தாலும், மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். அவர் 40 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் விளாசினார். திலக் வர்மா (25), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (32), சிவம் துபே (27) ஆகியோரின் பங்களிப்பால் இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது.

176 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்த அந்த அணி, 13 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. உஸ்மான் கான் (44), ஷாகீன் அப்ரிடி (23) ஆகியோர் ஓரளவிற்குப் போராடினாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 18 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்தியத் தரப்பில் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதியிலும், அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும் ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றியைத் திருவிழா போலக் கொண்டாடினர்.

பலுசிஸ்தான்: பலுச் பகுதியில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தெருக்களில் இறங்கி நடனமாடி இந்தியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இதேபோன்று  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்ளிட்ட நகரங்களில் ரசிகர்கள் திரளாகக் கூடி இந்திய வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் நமீபியாவை வீழ்த்தியுள்ள இந்திய அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் பிப்ரவரி 18-ம் தேதி நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.