அகில இந்திய சைனிக் பள்ளியில் ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிசம்பர் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை வட்டம் அமராவதி அணைக்கு அருகே அமராவதி சைனிக் பள்ளி உள்ளது. இது மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் படி இயங்கும் ஆங்கில வழி பள்ளியாக இருந்தாலும் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இங்கு ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படும் நிலையில் இந்தியாவில் உள்ள 13 சைனிக் பள்ளிகளில் அமராவதி சைனிக் பள்ளியும் ஒன்று. இந்த நிலையில் அகில இந்திய சைனிக் பள்ளிகளில் ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான நுழைவு தேர்வுக்கு மாணவர்கள் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி தேசிய நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையதளம் மூலமாக டிசம்பர் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.